புத்ராஜெயா, மே 15- அதிக செலவு பிடிக்கக் கூடியதாக இருந்தாலும் கிளந்தான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
குடிநீர்ப் பற்றாக்குறை என்பது அரசியல் பிரச்சினையாக அல்லாமல் அடிப்படை பிரச்சனையாக உள்ளதால் கிளந்தான் மற்றும் சபாவில் நிலவும் இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மே மாத ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜி நோர் மற்றும் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ அகமது யாக்கோப்புடன் தாம் விவாதித்து உள்ளதாக கூறிய அவர், அதிக செலவு பிடிக்கும் என்ற போதிலும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்று கிளந்தான் சுல்தானிடம் தாம் வாக்குறுதி அளித்துள்ளதாக சொன்னார்.
கிளந்தான் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி வகைகளை ஆராய்வதற்காக ஹாஜ்ஜி மற்றும் அகமது யாக்கோப் இருவரையும் இரு வார காலத்தில் தாம் சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பன்னிரண்டாவது மலேசியத் திட்டம் மற்றும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள கிளந்தான் மற்றும் சபா குடிநீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்பதை அதற்கான திட்டங்கள் காட்டுவதாக நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
இவ்விரு மாநிலங்களிலும் நீர்ப்பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக பொருளாதார அமைச்சு மற்றும் நிதியமைச்சு நிலையிலான சந்திப்பு நடத்தப்படும் என்ற தகவலையும் அன்வார் வெளியிட்டார்.