ஷா ஆலம், அக் 22 – ஷா ஆலம் மாநகர் மன்றம் தொடர்பான குறைகள் மற்றும் கருத்துகளை பொது மக்கள் முன்வைக்கும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 24) ‘ஹரி மெஸ்ரா’ எனும் நிகழ்வை மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்களுக்கான சேவைத் தரத்தை மேம்படுத்துவதற்கான மாநகர் மன்றத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக மற்றும் மக்கள் தொடர்புத் தலைவர் முகமது அஸார் முகமது ஷெரீப் கூறினார்.
மாநகர் மன்றத்தின் கீழ் உள்ள துறைகள், பிரிவுகள் மற்றும் கிளை அலுவலகங்கள் தங்கள் சேவைகளை பொது மக்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கும் பிரபலப்படுத்து- வதற்குமான வாய்ப்பையும் இந்த குறை கேட்கும் தினம் வழங்குகிறது.
ஷா ஆலம் மாநகர் அந்தஸ்தைப் பெற்று 23வது ஆண்டு நிறைவடைவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு செக்சன் 7, சென்ட்ரல் ஐ-சிட்டியில் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத்தில்10 வெள்ளி தள்ளுபடியும் மற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றப்பதிவுகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியும் பெறலாம்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முதல் 50 வாடிக்கையாளர்களுக்கும் இலவசப் பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று அஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் இந்த மக்கள் நட்புறவு தினத்தின் போது போது மதிப்பீட்டு வரி, அபராதம் செலுத்துதல் மற்றும் லைசென்ஸ் புதுப்பித்தல் விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.