ஷா ஆலம், டிச.17- பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் மாநில கழிவு மேலாண்மை நிறுவனமான கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் (கே.டி.இ. பி.டபிள்யூ.எம்.) வெள்ள அபாயம் உள்ள 242 இடங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது.
ஷா ஆலம் மாநகர் மன்றப் பகுதியில் மிக அதிகமாக 51 இடங்களும் அதைத் தொடர்ந்து அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகப் பகுதியில் 47 இடங்களும் காஜாங் நகராண்மைக் கழகப் பகுதியில் 35 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி தாஹிர் கூறினார்.
வெள்ளத்தைத் தடுக்க மக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால்களை சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில் கால்வாய்கள் அடைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுபடியும் கேட்டுக் கொண்டார்.
வடிகாலில் குப்பைகளை வீசாதீர்கள். வடிகால்கள் மீது நிரந்தர கட்டுமானங்களை உருவாக்காதீர்கள். ஏனெனில் இது தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை கடினமாக்கும் என்று அவர் கூறினார்.
வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதால் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சாக்கடையில் வீச வேண்டாம் என்று உணவக நடத்துநர்களுக்கு ரம்லி நினைவூட்டினார்.
அனைத்து தரப்பினரும் அக்கறையுடனும் பொறுப்புடனும் இருந்தால் வடிகால்களில் நீரோட்டம் தடைபடாது. இதன் வழி வெள்ளத்தையும் தடுக்க முடியும் என்றார்.
கடந்த நவம்பரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா தெரிவித்துள்ளார்.