கோலா சிலாங்கூர், ஜன 20- அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான ஜெலாஜா மடாணி பயணத்தின் போது சிலாங்கூர் மக்களுக்கு ‘பரிசு’ ஒன்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பிப்ரவரி 23 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் அன்வாரே அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின் கூறினார்.
சிலாங்கூருக்கு பரிசு. பிரதமரின் அறிவிப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த திட்டம் மடாணி மலேசியாவின் ஓராண்டு கொண்டாட்டத்துடன் இணைந்த ஒரு தொடர் நிகழ்ச்சியாகும் என்று அவர் சொன்னார்.
தாங்கள் செய்தவை என்ன என்பதை அனைத்து அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களும் மக்களுக்கு விளக்குவதற்கு இந்நிகழ்வு வாய்ப்பளிக்கிறது. இதன் வழி பொதுமக்கள் உண்மையான தகவல்களைப் பெற முடியும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, அவர் இங்குள்ள டி பால்மா ஹோட்டலில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பெர்மாத்தாங் மாநில சட்டமன்ற ஒருங்கிணைப்பு மக்கள் சேவை மையத்திற்கும் இடையயிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதற்கிடையில், அரிசி உற்பத்தியை பாதிக்கும் மண் வளப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நெல் விவசாயிகளுக்கு உதவும் திட்டங்களை பிரதமர் அன்வார் உதவி அறிவிப்பார் எனத் தாம் நம்புவதாக பெர்மாத்தாங் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் முகமது யாஹ்யா மாட் சாஹ்ரி தெரிவித்தார்.