கோலா கங்சார், ஜூலை 22:
இதற்கு முன்பு, அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத் தலைவர்கள் ‘அனுபவம்’ என்ற தாரக மந்திரத்தை உச்சரித்து நாட்டு மக்களை பயமுறுத்தி தொடர்ந்து நாட்டை ஆண்டு வருகிறார்கள். அம்னோ தேசிய முன்னணியை பொறுத்த மட்டில் எதிர்க்கட்சிகள் நாட்டை ஆளும் அனுபவம் இல்லை என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.
ஆனாலும், தற்போதைய சூழ்நிலையில் அம்னோ தேசிய முன்னணி தலைவர்கள் பல தடவை யோசித்து ‘ஆளும் அனுபவம்’ என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.
” எதிர்க்கட்சிகளுக்கு நாட்டை நிர்வகிக்கும் திறமை அல்லது அனுபவம் போதாது என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது இதற்கு மாறாக நடந்துக் கொண்டு வருகிறது. அம்னோவின் பொழுதுபோக்கு கதைகளை ஓரம் கட்டி விட்டு சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களின் வெற்றிச் சுவடுகளை சற்று கவனியுங்கள். எனக்கு அனுபவம் இல்லை என்று ஏளனம் செய்கிறார்கள். எனக்கு 1எம்டிபி பணத்தை எடுத்து சொந்த வங்கி கணக்கில் போடத் தெரியாது,” என்று பலத்த கரவொலியிடையே கூறினார்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, தங்களுக்கு அனுபவம் அதிகம் என்று மார்தட்டிக் கொள்ளும் தலைவர்கள் இன்று பல பில்லியன்களை கோட்டை விட்டது வெட்ட வெளிச்சம். இதற்கு முன்பு, பெர்சத்து கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் கூறுகையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த தலைவர்களை கொண்டிருப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது..
#கேஜிஎஸ்