கோலாலம்பூர், செப். 17:
கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 23 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் எண்ணமே முக்கிய காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் நிகழ்ந்து 48 மணி நேரம் ஆவதற்குள் போலீஸ் 11 வயது முதல் 18 வயது வரையிலான 7 பேரை கைது செய்ததைத் தொடர்ந்து இந்த தகவல் அம்பலமாகியுள்ளது.
அந்த சமய பள்ளிக்கு அருகாமையிலுள்ள மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர்கள் சங்க கட்டடத்திலுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு பின்னர் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கெராமாட் பகுதியில் இருவரை போலீஸ் கைது செய்ததை தொடர்ந்து மேலும் ஐவரை போலீஸ் கைது செய்தது.
போலீஸ் மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணையில் கேலி செய்ததால் அதிருப்தியுற்றவர்கள் பழி வாங்கும் நோக்கில் பெட்ரோல், 2 எரிவாயு கலன் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த தீ விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அமார் சிங் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் கைது செய்துள்ளதால் இதன்பிறகு யாரையும் போலீஸ் கைது செய்யாது. கைது செய்யபட்டவர்களில் சந்தேகத்திற்குரியவர் சிசிடிவி காணொளியில் பதிவான காட்சியில் இருப்பதை போலீஸ் உறுதிபடுத்தியுள்ளது.
அந்நபரின் நோக்கம் அந்த சமய பள்ளியை எரிப்பதாகும். நாங்கள் நாளை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டோம். ஆனால், சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான படமும் தகவலும் பரவியதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினோம். குற்றவியல் சட்டவிதி செக்ஷன் 203-இன் கீழ் போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருவதாக டத்தோ அமார் சிங் குறிப்பிட்டார்.
செய்தி: அநேகன்