NATIONAL

சிலாங்கூர் மாநில சாதனையை மத்திய அரசாங்கத்திலும் அஸ்மின் அலியால் தொடர முடியும்!!

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் செய்திட்ட சாதனைகளையும் திறன்மிக்க செயல்பாடுகளையும் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியால் மத்திய அரசாங்கத்திலும் தொடர முடியும்.மந்திரி பெசாராக அவர் மேற்கொண்ட சாதனைகளும் வெற்றிகளும் மத்திய அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அஸ்மின் அலியால் திறன்பட மேற்கொள்ளப்படும் என்றும் முன்னாள் பேங்க் நெகாராவின் துணை இயக்குனர் டாக்டர் ரோஸ்லி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார்.

மந்திரி பெசாராக அஸ்மின் அலி கொண்டிருக்கும் சாதனைகள் மற்றும் அமெரிக்கா மின்னோஸ்தா பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்ட கணிதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கல்வியல் நிலை ஆகியவை மத்திய அரசாங்கத்தில் அஸ்மின் அலி மேலும் மிளிரவும் நாட்டின் பொருளாதாரத்தை சிறக்க வைக்கவும் பெரும் பங்காற்றும் என்றும் அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூரில் மிக குறுகிய காலத்தில் அஸ்மின் அலி மந்திரி பெசாராக பொருளாதார ரீதியில் அம்மாநிலத்தில் சிறந்த முன்னேற்றத்தை கொண்டு வந்த நிலையில் அஃது மத்தியத்திலும் அஸ்மின் அலியால் கொண்டு வர முடியும்.அவரது அனுபவமும் விவேகமான திறன்மிக்க செயல்பாடும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும்.அஸ்மின் அலி நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு கிடைத்த பொக்கிசம் என்றார்.
சிலாங்கூரில் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தால் மாநில பொருளாதாரம் நாட்டின் வருமானத்தில் முக்கிய பங்களிப்பினை செய்ததோடு வெளிநாடுகளின் முதலீட்டையும் வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் முந்தைய அரசாங்கத்தால் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளதை நாடே அறிந்திருக்கும் வேளையில் அதனை மீண்டும் சரியான இலக்கை நோக்கி பயணிக்க அஸ்மின் அலியின் விவேகமான மற்றும் தூரநோக்கு சிந்தனைகள் மூலதனமாக அமையும் என்றும் கூறிய அவர் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு கிடைத்த மந்திரக்கோல் அஸ்மின் அலி என்றும் புகழாரம் சூட்டினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் நிதிநிலையை சிறந்த நிலையில் நிர்வாகித்ததோடு பொருளாதாரத்தையும் உயர்த்தி மாநிலத்தின் கையிருப்பையும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும் அதிகரிக்க செய்த அஸ்மின் அலி நாட்டின் பொருளாதாரத்தை அவ்வாறு சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வார் என்றும் பேங்க் நெகாராவின் முன்னாள் துணை இயக்குனர் கூறினார்.மேலும்,சிலாங்கூரை உலக அரங்கில் பொருளாதார நிலைக்கு உயர்த்திய அஸ்மின் அலி மீண்டும் மலேசியாவை உலக அரங்கில் பொருளாதார செழிப்பு மிக்க நாடாக உயிர்ப்பிப்பார் என்றும் அவர் தனது நம்பிக்கையினை வெளிப்படுத்தினார்.


Pengarang :