ஷா ஆலம், டிச.31-
புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி மாதம் முழுமையும் வாகண நிறுத்துமிட அபராதக் கட்டணத்தை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் குறைக்கவிருக்கிறது. வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்காக 2002 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான அபராதக் கட்டணம் 10 ரிங்கிட்டாகக் குறைக்கப்படும் என்று பொது தொடர்புப் பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.
அதேவேளையில், 2010ஆம் ஆண்டு தொடங்கி 2020ஆம் ஆண்டு வரையில் இக்குற்றத்திற்கான அபராதம் 30 ரிங்கிட்டாகக் குறைக்கப்படும் என்றும் அவர் சொன்னார். இந்த இயக்கமானது அபராதம் விதிக்கப்பட்டவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய அபராதங்களை விரைவாகச் செலுத்துவதற்கு வழங்கும் உதவியாகும். இத்தவணைக் காலத்திற்குப் பின்னர் அபராதத் தொகையைச் செலுத்தாவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், 1983ஆம் ஆண்டு முடிதிருத்தக துணைச் சட்டம், 2005ஆம் ஆண்டு பூங்கா (எம்பிஎஸ்ஏ) துணைச் சட்டம், 2005ஆம் ஆண்டு பொது சொத்து நாசம் (எம்பிஎஸ்ஏ) துணைச் சட்டம் மற்றும் 2007ஆம் ஆண்டு உணவக துணைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்ட அபராதக் கட்டணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.