ஷா ஆலம், மார்ச் 16-
சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாட்சிமை தங்கிய மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நினைவுறுத்தினார். மாநில அரசாங்கம் மற்றும் அதன் நிர்வாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் எவரும் குழுப்பம் ஏற்படுத்துவதை தாம் காண விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
பொருளாதார நலிவு மற்றும் கோவிட்-19 பரவல் காரணமாகவும் பெரும் சவால்களை மக்கள் எதிர்நோக்கும் வேளையில், 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்று அரசியல் கொந்தளிப்புகளைக் கண்டு தாம் மிகவும் சோர்வுற்றுள்ளதாக அவர் சொன்னார். அரசியல் சர்ச்சை மற்றும் விவாதங்களில் மூழ்கியுள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கு ஆற்ற வேண்டிய தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் மறந்துள்ளனர் என்றார் அவர்.
“எனவே, மக்களின் வளப்பத்திற்கு வகை செய்யும் கொள்கைகள் வழி பொருளாதார வளர்ச்சி மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துவதன் மூலமாகவே நடப்பு நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண முடியும்” என்று அவர் வலியுறுத்தினார்.