டாங்கி, ஏப்ரல் 7:
கட்டுப்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிடி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை லூய் பகுதி மக்களுக்கு போதுமான அளவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும்படி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். எதிர் வரும் ஏப்ரல் 13 வரை இந்த பொருட்களின் விநியோகம் பொதுமான அளவில் இருக்கும் என்றும் ஒரு வேளை பிகேபிடி நீட்டிக்கப்பட்டால் அரசாங்கம் தேவையான பொருட்கள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளோ அல்லது மீன்களோ அல்லது இறைச்சி வகைகளோ போதுமான அளவில் உள்ளது. பெண்கள் உபயோகிக்கும் ‘மோடர்ஸ்’ மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் ‘பெம்பர்ஸ்’ அனைத்தும் அளவாக உள்ளது. நமது அன்றாட வாழ்க்கை எப்போதும் போல இல்லை என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் போதிய அளவிலான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பது மிக முக்கியமான ஒன்று,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.