காஜாங், ஜூலை 20:
காஜாங் வட்டாரத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை எதிர் கொள்ள 12-வது மலேசியத் திட்டத்தின் கீழ் ரிம 500 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்யும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் தெரிவித்தார். சுங்கை லங்காட் இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்பு திட்டத்தில் ஆற்றை ஆழப் படுத்துவது, நீர் அளவை கட்டுப் படுத்துவது மற்றும் நீர் தேக்கியை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அடங்கும் என டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
” சுங்கை ஜம்பு, சுங்கை பெனிங் மற்றும் சுங்கை கெராமாட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த திட்டத்தின் கீழ் வெள்ளத்தின் பாதிப்பு குறையும். நீண்ட நேரம் மழைப் பெய்யும் காலகட்டத்தில் ஏற்படும் வள்ள அபாயத்தை எதிர் கொள்ள முடியும். கடந்த சில தினங்களில் தொடர்ந்து பலமான மழை பெய்த காரணத்தால் 192 மில்லிமீட்டர் நீர் ஆற்றைக் கடக்க முற்பட்ட போது திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சுங்கை லங்காட் ஆறு வெறும் 82 மில்லிமீட்டர் அளவில் நீர் மட்டுமே ஒரே சமயத்தில் கடக்க முடியும்,” என்று காஜாங் நகராண்மை கழகத்தில் (எம்பிகெஜே) நடைபெற்ற வெள்ள நிவாரண நடவடிக்கை விளக்கக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.