ஷா ஆலம், ஏப் 17– ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை கடுமையாக்குவதோடு அவ்விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினர் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஷாருள் லால்லி மட்சுக்கி ஆகியோருடன் நடத்திய சந்திப்பின் போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த கோரிக்கையை விடுத்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 பெருந்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தாம் இச்சந்திப்பில் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.
தமது இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காவல் துறை, ரமலான் சந்தைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என உறுதிளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிமுறைகளை புறக்கணித்து வந்தால் ரமலான் சந்தைகளை ரத்து செய்ய மாநில அரசு தயங்காது என்று மந்திரி புசார் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.