ஷா ஆலம், மே 12: குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான சிலாங்கூர் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டம் (பி 40) பிரிவினருக்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று வீடமைப்பு, நகர்புற நல்வாழ்வு மற்றும் தொழில் முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
ரோட்ஸியா இஸ்மாயில் இப்பிரிவினருக்கு ஆறு மாதங்களுக்கு சத்து உணவு வழங்கப் படவுள்ளது என்றும் இதற்கான ஒதுக்கீடு உண்டு என்றார்.
கடந்த ஆண்டு மாநில சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் ஏழ்மைக் காரணமாக (பிபிஆர்) நகர்ப்புற குழந்தைகளும், குறைந்த விலை வீடு தொகுதிகளில் வாழும் சிறார்களும் வறுமை காரணமாக உடல் நலிவுற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டது. அவர்களுக்கு ஊட்ட சத்து உணவு வழங்க இந்த ஒதுக்கீடு பயன்படும் என்றார் அவர்.
இன்று ஷா ஆலம் கன்வென்ஷன் சென்டரில் (எஸ்.ஏ.சி.சி) சிலாங்கூர் டிஜிட்டல் இ-சப்ளை செயின் (செல்டெக்) ஏற்பாட்டில் உணவு விநியோக தொழிலில் ஈடுப் பட்டுள்ளவர்களுக்கான (ஹரி ராயா) நோன்பு பெருநாள் அன்பளிப்புகளை வழங்கிய பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
சிலாங்கூர் பட்ஜெட் 2021 அனைத்து 56 மாநில சட்டமன்றங்களிலும் (DUN) சிலாங்கூர் உணவு வங்கி திட்டத்திற்காக RM6 மில்லியனை ஒதுக்கியது.
அந்த ஒதுக்கீட்டில் இருந்து மொத்தம் ஒரு மில்லியன் ரிங்கிட், ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிலாங்கூர் குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்திற்கு பயன்படுத்த உறுதி வழங்கப்பட்டது
கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி,கோத்தா டாமன்சாரா பிபிஆரில் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்) நடத்திய ஆய்வில்,அந்த மலிவு விலை வீடமைப்பில் வாழும் 33 சதவீத குழந்தைகள் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கொண்டிருப்பதை கண்டறிந்ததாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.