புத்ராஜெயா, ஏப். 23:
கிழக்கு கரை நெடுஞ்சாலை ரயில்(இசிஆர்எல்) தண்டவாளம் நெடுகிலும் உள்ள 4, 500 ஏக்கர் நிலம் சீன நிறுவனத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்படுவதை நிதியமைச்சர் லிம் குவான் எங் மறுத்தார்.
21.5 பில்லியன் வெள்ளி ‘கழிவுக்காக’ இசிஆர்எல் நிலையம் அருகே ஏழு வெவ்வேறு தொழிற்பேட்டை பூங்காக்களில் சுமார் 4,500 ஏக்கர் நிலம் சீன தொடர்பு கட்டுமான நிறுவனத்திற்கு (சிசிசிசி) இலவசமாக வழங்கப்படும் என இணைய பதிவேட்டாளர் ராஜா பெட்ரா கமாருடின் கூறியிருப்பது குறித்து லிம் குவான் எங் இவ்விதம் கருத்துரைத்தார்.
21.5 பில்லியன் வெள்ளி மிச்சப்படுத்தப்படும் நிலையில் சிசிசிசி நிறுவனத்துடனான சிறந்த உடன்படிக்கையின் வழி இசிஆர்எல் ரயில் திட்டம் தொடரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 65.5 பில்லியன் வெள்ளியாக இருந்த இத்திட்டத்தின் மொத்த செலவு தொடர் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் 44 பில்லியன் வெள்ளியாகக் குறைக்கப்பட்டது.
“4,500 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது தொடர்பில் என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. இது நியாயமானதும் கிடையாது. குத்தகை யைப் பொருத்தவரை எந்தவொரு கூடுதல் அம்சமாக இருந்தாலும் அது அமைச்சரவை வாயிலாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார் அமைச்சர்.