புத்ராஜெயா, ஜூன் 20:
சர்ச்சைக்குரிய காணொளி மீதான புலன்விசாரணை நடைபெற்று வரும் வேளையில் பொருளாதார விவகார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி விடுப்பில் செல்லத் தேவையில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
அதிகார துஷ்பிரயோகம் அல்லது குற்றவியல் தொடர்புள்ள புலன் விசாரணை நடைபெற்றால் மட்டுமே எந்தவோர் அமைச்சரும் விடுப்பில் செல்வது அவசியமாகும். ஆனால் அஸ்மின் அலியை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்றார் அவர்.
உண்மையில் அவரை அவமானப்படுத்தவும், விடுப்பில் செல்லத் தூண்டுவதுமே இக்குற்றச்சாட்டின் நோக்கமாகும். எனக்கு இந்த அரசியல் வீளையாட்டில் ஈடுபாடில்லை என்று பிரதமர் துறையில் நடைபெற்ற ஹரி ராயா உபசரிப்புக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் கூறினார்.
அந்தக் காணொளி மீதான புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு அஸ்மின் அலி எந்த வகையான இடையூறையும் விளைவிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.தன்னைத் தொடர்புபடுத்தும் காணொளி மீது போலீசார் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் அஸ்மின் அலி கடந்த திங்கள்கிழமை தனது வாக்குமூலத்தை அளித்தார்.