கோலாலம்பூர், ஜூலை 21:
மத்திய அரசாங்கத்தின் 54 அமைச்சு, இலாகா மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 34 அமைப்புகள் சிறந்த நிதி நிர்வாக அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளன என்று தேசிய கணக்காய்வு துறை தலைவர் டத்தோ நிக் அஸ்மான் அப்துல் மஜிட் கூறினார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 54 அமைப்புகளில் 14 அமைச்சுகள், இலாகா மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் ஆகியன சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்திருந்தன. மிகச் சிறந்த அடைவு நிலைக்கு 5 புள்ளிகள் தொடங்கி 1 நட்சத்திர மதிப்பீட்டு புள்ளிகள் வழங்கப்பட்டதாக தேசிய கணக்காய்வு இலாகா வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அமைச்சு, இலாகா மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் நிதி நிர்வாகம், நடவடிக்கை ஆகியவற்றின் மீதான கணக்காய்வு அறிக்கையை தேசிய கணக்காய்வு துறை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது என்று அவ்வறிக்கை கூறியது.
மாநிலங்கள் அளவில், 83 அமைச்சுகள், இலாகா மற்றும் அரசாங்க நிறுவனங்களில் 69 சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்திருந்த வேளையில், 26 அமைப்புகள் திருப்தியளிக்கும் அடைவு நிலையை பதிவு செய்திருந்தன. ஆயினும் 12 அமைப்புகள் சற்று குறைவான அடைவு நிலையை பதிவு செய்திருந்த வேளையில், 2 அமைப்புகள் மோசமான அடைவு நிலையை பதிவு செய்திருந்தன என்றும் அது சுட்டிக் காட்டியது.