ஷா ஆலம், டிச.16-
மாநில அரசாங்கத்தின் உத்தரவை மீறும் சட்ட விரோதத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் பதிவுபெற்ற நில உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) எச்சரித்துள்ளது. உரிமம் பெறாத தொழிற்சாலைகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் திட்டத்திற்காக சிறப்பு நடவடிக்கை குழு ஒன்றைத் தமது தரப்பு தோற்றுவித்துள்ளதாக டத்தோ பாண்டாராயா டத்தோ ஹாரிஸ் காசிம் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது 1976ஆம் ஆண்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் சட்டத்தின் 172ஆவது பிரிவின் கீழும், 1974ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் கால்வாய் சட்டம் மற்றும் ஊராட்சி மன்றத்தின் 171ஆவது சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
இத்திட்டத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவிடம் இந்த சிறப்பு நடவடிக்கை குழு, சம்பந்தப்பட்ட சட்டவிரோத தொழிற்சாலை அமலாக்கம் மீது எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும் என்றார் அவர்.