புத்ராஜெயா, டிச.19-
சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு லிம் கொக் விங் பல்கலைக்கழகம் இன்று தலைமைத்துவ கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் லிம் கொக் விங் பல்கலைக்கழகத்தின் தோற்றுநரும் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோஸர் டாக்டர் லிம் கொக் விங் மந்திரி பெசாருக்கு இந்த அங்கீகாரம் வழங்கினார்.
இந்த அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமிருடின் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் அடைவு நிலை பெருமையளிப்பதாக தெரிவித்தார்.
“இன்று உயர்க்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு வரலாற்றுப் பூர்வ நாளாகும். நாளைய தொழில்முனைவராகவும் தலைவராகவும் திகழக்கூடிய உங்களோடு இருப்பதை நான் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.
இந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில் 67 நாடுகளைச் சேர்ந்த ஓராயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தத்தம் துறையில் இளங்கலை மற்றும் டிப்ளோமா பெற்றனர்.