ஷா ஆலம், ஜன.7-
பொது மக்கள் மற்றும் சாலைப் பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்கு மிரட்டலாக கண்ட இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கோல லங்காட், ஓலாக் லெம்பிட்டில் தங்க வைக்கப்படுவதற்கான திட்டம் விரைவுப் படுத்தப்படவேண்டும் என்று சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முகமது ஜாவாவி அகமது முக்னி கோரிக்கை விடுத்தார்.
இந்த கால்நடைகளை அடைத்து வைப்பதற்கான சிறப்பு பகுதி கடந்தாண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது இவ்வாண்டு மார்ச் மாதத்தில் பூர்த்தியடையும் என்று பொதுப் பணித்துறை கூறி வருவதாக அவர் சொன்னார்.
இப்பகுதியில் வேலி இடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனைவரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை விரைவுப்படுத்தப்படுவது அவசியமாகும். அதேவேளையில், சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டம் நிறைவுற்றதும், சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் கால்நடைகளை அந்தப் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்றார் அவர்.