ஷா ஆலம், மார்ச் 1:
மக்கள் மற்றும் மாநில மேம்பாட்டிற்கு பயனளிக்கக் கூடிய வகையில் வாய்ப்புகளை நுட்பமாக அடையாளம் காண்பதோடு அவற்றின் வழி நன்மையை அடைவதற்காக சிலாங்கூர் கடுமையாக உழைத்திட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நினைவுறுத்தினார்.
“மாநிலத்தின் பொருளாதாரம் இவ்வாண்டு வர்த்தக போர் மற்றும் கோவிட்-19 அச்சுறுத்தல் ஆகியவற்றால் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளதை உணர்ந்து 2015ஆம் ஆண்டு அல்லது 2010,2011ஆம் ஆண்டுகளின் வருவாய்க்கு நிகராக இவ்வாண்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்றால் முயற்சிகளை அவசியம் அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.
“இந்நிர்வாகத்திற்கு 2020ஆம் ஆண்டு ஒரு முக்கிய தருணமாகும். கடந்த 10 ஆண்டுகளின் அடைவுநிலையைக் காட்டிலும் புதியதொரு சாதனையைப் படைப்பது அவசியமாகும். அதே வேளையில், மறுமலர்ச்சிக்கு முந்திய கொள்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு , திறமையான மற்றும் நேர்மையான நிர்வாக நடைமுறை தொடர்வதற்கு இந்த அடைவு நிலை அவசியமாகும்” என்று அவர் சொன்னார்.
நிலையற்ற பொருளாதாரச் சூழலில் போட்டியிடும் ஆற்றலை மக்கள் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு போதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று இந்தோனேசியா பாண்டுங்கில் உள்ள சிலாங்கூர் ஆட்சிக் குழு பேராளர்களுக்கான செய்தியில் அமிருடின் குறிப்பிட்டுள்ளார்.