ஷா ஆலம், ஜூலை 26:
பத்து ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை வெற்றிகரமாக வழி நடத்தி வரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, மற்ற மாநிலங்களை வெற்றி பெற சிலாங்கூரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மக்கள் நீதிக் கட்சியின் (பிகேஆர்) தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாசில் கூறினார். மற்ற மாநிலங்கள் சிலாங்கூர் மாநில செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் முன்னணி தலைவர்களின் சிந்தனை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
” சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் பாக்காத்தான் மாநிலங்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக, சபா மற்றும் நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். சிலாங்கூர் மாநில அரசாங்க நிர்வாகம் அலட்சியமாக இருந்ததில்லை. நேரத்தை வீணடிக்கவில்லை, மாறாக சிலாங்கூர் மக்களுக்கு சிறந்த ஒரு அரசாங்கமாக விளங்கியது. பல்வேறு தரப்பினரின் ஆய்வுகள் அடிப்படையில், பிகேஆர் மக்களிடையே செல்வாக்கு மட்டுமின்றி மனதில் நிரந்தரமாக குடி கொண்டுள்ளது,” என்று அம்பாங் டி பால்மா இன் தங்கும் விடுதியில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் பேசினார்.