ஷா ஆலம், நவ 24- நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட காரணத்தால் சுபாங் ஜெயாவில் நடைபெறவிருந்த வேலை வாய்ப்புச் சந்தை வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த அந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு 500க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் கூறினார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையை கடந்த வாரம் நடத்த திட்டமிட்டிருந்தோம். எனினும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்பட்ட காரணத்தால் அதனை வரும் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடத்த முடிவெடுத்துள்ளோம் என்றார் அவர்.
சுமார் 60 முதலாளிகள் பங்கேற்கும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 1,200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதால் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வேலைக்கு விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இயங்கலை வாயிலான நேர்முகப் பேட்டியில் பங்கேற்கும் அளவுக்கு போதுமான கணினி ஆற்றலைக் கொண்டிராதவர்கள் நேரடியாக வேலை வாய்ப்புச் சந்தைக்கு வந்து நேர்முகப் பேட்டியில் பங்கு கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.