ஷா ஆலம், நவ 29- இம்மாதத்தில் சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டிய குற்றத்திற்காக 11 லோரிகளை காஜாங் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.
நகராண்மைக் கழகத்தின் சேவை மற்றும் சுகாதார துறையின் கீழுள்ள சுற்றுச்சூழல் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஜூல்கிப்ளி காலிட் கூறினார்.
ஜாலான் குவாரி சுங்கை லோங், சுங்கை செராய், உலு லங்காட் ஆகிய பகுதிகளில் மூன்று லோரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய எட்டு லோரிகளும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
இந்த குற்றச் செயல்களை புரிந்த தரப்பினர் மீது 31 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டும் இடங்களின் நுழைவாயில்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த மாதங்களைக் காட்டிலும் குறைந்து காணப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.