கோலாலம்பூர், ஜன 12– நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டத் தரப்பினரின் சுமையைக் குறைக்கும் வகையில் 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை அறிவிக்கும்படி மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வா இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல வர்த்தகர்கள் தங்கள் தொழிலை மூடுவதை தவிர்ப்பதற்கும் பலர் வேலை இழந்து வறுமையில் வாடுவதை தடுப்பதற்கும் இந்த நிதி ஒதுக்கீடு அவசியமாக தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினர் பலர் இன்னும் ஊதிய உதவித் தொகையைப் பெறவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்திலிருந்து மீள முடியாத நிலை காரணமாக பல தொழில்கள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளன என்றார் அவர்.
மோரேட்டோரியம் எனப்படும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதோடு எஸ்.ஓ.பி. எனப்படும் சீரான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் புதிய தொற்று மையங்கள் தோன்றுவதை தடுக்க முடியும் என்றார் அவர்.
பதற்றமான இந்த சூழலில் சிறப்பான தலைமைத்துவதை எதிர்பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.