ஷா ஆலம், ஜன 16- நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்ட போதிலும் சிலாங்கூர் அரசு நிர்வாகத்திற்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதோடு அரசு பணிகளும் வழக்கம் போல் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
நிர்வாக அதிகாரம் முன்பு போலவே உள்ளதால் அரசு நிர்வாகத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஆட்சிக்குழு கூட்டம் கூட இம்மாதம் 13ஆம் தேதி அதாவது அவசரகாலம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர்தான் நடைபெற்றது என்றார் அவர்.
அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற ‘அவசரகாலம் என்பது எல்லையற்ற நிர்வாக அதிகாரமா?‘ எனும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவ இவ்வாறு கூறினார்.
நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அவசரகால நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது என்று தாம் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ளும் நோக்கில் அவசரகாலம் தொடர்பான பிரகடனம் இம்மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த பிரகடனம் அரசாங்கம் பதிவேட்டில் மறுநாள் இடம் பெற்றப் பின்னர் தேசிய சட்டத் துறை தலைவர் அலுவலகத்தின் அகப்பக்கத்தில் அது வெளியிடப்பட்டது.