கோலாலம்பூர், ஜன 30- வாகனமோட்டும் லைசென்ஸ்களைப் புதுப்பிப்பதற்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை இரு மாதங்களுக்கு விதிவிலக்களிக்கப்படுகிறது. சொந்த வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் (எல்.கே.எம்.) மற்றும் ‘பி‘ எழுத்து பொறிக்கப்பட்ட புதிய வாகனமோட்டிகளுக்கான லைசென்ஸ் (சி.டி.எல்.) ஆகியவற்றுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தும்.
எனினும், தங்கள் வாகனங்களின் காப்புறுதி புதுப்பிக்கப்பட்டுள்ளதை வாகனமோட்டிகள் உறுதி செய்ய வேண்டும் என்று போதுக்குவரத்து அமைச்சர் டத்தோ டாக்டர் வீ கா சியோங் கூறினார்.
சாலைத் தடுப்புகளில் சோதனைக்காக நிறுத்தப்படும் போது அவர்கள் செல்லத்தக்க அந்த காப்புறுதி சான்றிதழை அவர்கள் போக்குரத்த போலீசாரிடம் காட்ட வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.
விலக்களிக்கப்பட்ட இரு மாத காலத்தில் எல்.கே.எம். மற்றும் சி.டி.எல். லைசென்ஸ்கள் காலாவதியானவர்கள் இரு மாத கால அவகாசம் முடிந்த 30 நாட்களுக்குள் அதாவது ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குள் அவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள சீராக நிர்வாக நடைமுறைகளுக்கேற்ப பொது இடங்களில் ஜன நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் ஜி.டி.எல் மற்றும் பி.எஸ்.வி. போன்ற வர்த்தக வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான லைசென்ஸ்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.