ஷா ஆலம், ஏப் 20- ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தன் மனைவி மற்றும் தன் ஏழு மாத பெண் குழந்தையை கொலை செய்ததாக லோரி ஓட்டுநரான சட்விண்டர் சிங் (வயது 35) என்பவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி வழங்கப்படும்.
இந்த வழக்கில் எதிர்த்தரப்பும் அரசு தரப்பும் தங்கள் வாதத் தொகுப்பை முடித்துக் கொண்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது யாசிட் முஸ்தாபா தீர்ப்புக்கான தேதியை வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அரசு தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் மஹாதீர் முகமது கைருடின் இந்த வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவரை பிரதிநிதித்து வழக்கறிஞர் டத்தோ ரஜ்பால் சிங் ஆஜரானார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தாமான் ரவாங் பெர்டானா 2இல் உள்ள வீட்டில் விடியற்காலை 3.55 மணிக்கும் 4.15 மணிக்கும் இடையே டி.கமல்ஜிட் (வயது 34) மற்றும் ஏழு மாத பெண் குழந்தையான இஷிலின் கவுர் சிந்து ஆகியோரை படுகொலை செய்ததாக சத்விண்டர் சிங் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டமாய மரண தண்டனை வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.