ஷா ஆலம், ஏப் 23– சிலாங்கூரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட விலை உச்சவரம்பு திட்டத்தின் கீழ் பத்து உணவுப் பொருள்கள் விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
விலைக் கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களில் கோழி, கோழி முட்டை, இறைச்சி மற்றும் கடல் உணவுகளும் அடங்கும் என்று பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அமகது முக்னி கூறினார்.
நடப்பு நிலவரம் மற்றும் நடப்பு விலையைப் பொறுத்து பொருள்களுக்கான மொத்த மற்றும் சில்லரை விலை நிர்ணயிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
அத்தியாவசியப் பொருள்களுக்கான உச்ச வரம்பு விலைத் திட்ட அமலாக்கத்தை இங்குள்ள ஏயோன் பேரங்காடியில் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அமல் செய்யப்பட்ட இத்திட்டத்தின் கீழ் மொத்த வியாபார சந்தைகள் உள்பட 156 இடங்களில் விலை தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் வியாபாரிகள் நேர்மையாக நடந்து கொள்ளும் அதேவேளையில் அரசங்கத்தின் விலை உச்சவரம்பு திட்டத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.