ஷா ஆலம், ஜூன் 3– கழிவு நீரை பொது கால்வாயில் வெளியேற்றிய காரணத்தால் ரப்பர் கையுறைத் தொழிற்சாலை ஒன்றின் நடவடிக்கைகளை மூட சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.
உலு லங்காட், பெரேனாங்கில் உள்ள அந்த தொழிற்சாலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்திலும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அத்தொழிற்சாலை நிர்வாகம் அமிலம் கலக்கப்பட்ட பொருள்களை கழுவி சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட நீரை சுத்திகரிக்காமல் அருகிலுள்ள கால்வாயில் கலக்க விட்டது கண்டு பிடிக்கப்பட்டதாக மாநில சுற்றுச் சூழல் துறை இயக்குநர் நோர் அஸியா ஜாபர் கூறினார்.
அந்த கழிவு நீரை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் முறையாக சுத்திகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டது என்றார் அவர்.
அந்த தொற்சாலைக்கு தாங்கள் சீல் வைத்துள்ளதோடு அதன் லைசென்ஸ் தகுதி குறித்து ஆராயும்படி காஜாங் நகராண்மைக்கழகத்தை தாங்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.