ஷா ஆலம், ஜூலை 2- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் பிறரிடம் உதவி கோரும் விதமாக வெள்ளைக் கொடி ஏற்றும் மக்களுக்கு தாங்கள் உதவத் தயாராக உள்ளதாக சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.
உதவி தேவைப்படுவோரை எளிதில் அடையாளம் காண்பதில் இந்த வெள்ளைக் கொடி இயக்கம் பெரிதும் துணை புரிவதாக மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.
பிறரிடம் உதவி எதிர்பார்ப்பவர்கள் அனைவரிடமும் விவேக கைபேசி வசதியோ உதவி கோரி விண்ணப்பம் செய்வதற்கான திறனோ இருப்பதில்லை என்று அவர் சொன்னார்.
மேரு தொகுதியில் வெள்ளைக் கொடி ஏற்றியவர்களுக்கு உணவு, குழந்தைகளுக்கான பால் மாவு உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு அல்லது இதர உதவி தேவைப்படுவதற்கு அடையாளமாக வீட்டின் முன் புறம் வெள்ளைக் கொடி ஏற்றும் இயக்கத்தை நெட்டிசன்கள் எனப்படும் சமூக ஊடக பயனாளர்கள் தொடக்கினர்.
இதனிடையே, இந்த வெள்ளைக் கொடி இயக்கம் குறித்து கருத்துரைத்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோஜ், கிள்ளான், கம்போங் ஜாவாவில் உள்ள இரு வசதி குறைந்த குடும்பங்களை அடையாளம் காண இந்த இயக்கம் துணை புரிந்ததாக கூறினார்.
கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் வாயிலாக மாநில அரசு வழங்கிய ஐம்பதாயிரம் வெள்ளி கூடுதல் மானியத்தை கொண்டு இத்தகைய தரப்பினருக்கு உதவுவதற்கான வாய்ப்பினை இந்த இயக்கம் ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
எங்கள் தொகுதி சேவையை மையத்தின் வாயிலக தினசரி மாலை 4.00 தொடங்கி 120 உணவுப் பொட்டலங்களை வசதி குறைந்தவர்களுக்கு விநியோகித்து வருகிறோம். இது தவிர அரசு சாரா அமைப்புடன் இணைந்து கம்போங் ஜாவா பகுதியில் 300 பேருக்கு மதிய உணவை ஏற்பாடு செய்து தருகிறோம் என்றும் அவர் சொன்னார்.
இந்த வெள்ளைக் கொடி இயக்கத்தை தாம் வரவேற்பதாக கூறிய பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கிட், எனினும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு நீடித்த தீர்வு காண்பது அவசியம் என்றார்.