ஷா ஆலம், ஜூலை 9– தங்கள் தொகுதி மக்களின் குறிப்பாக, வெள்ளைக் கொடி ஏற்றுவோரின் நிலையை அறிந்து உடனடியாக உதவி செய்வதற்கு ஏதுவாக எந்நேரமும் விழிப்புடன் இருக்கும்படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
மக்களின் வலியை உணர்த்தும் அடையாளமாக விளங்கும் இந்த வெள்ளைக் கொடி விவகாரத்தை யாரும் அலட்சியமாக எண்ணக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெள்ளைக் கொடியை ஏற்றும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது. இதுதான் மக்கள் எதிர்நோக்கும் உண்மையான நிலை. ஆகவே, அவர்களுக்கு நாம் உடனடியாக உதவ வேண்டும் என்றார் அவர்.
இந்த வெள்ளைக் கொடி இயக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிலர் முற்படலாம். ஆயினும், அது சிறிய எண்ணிக்கைதான். வெள்ளைக் கொடியை காணும் பட்சத்தில் அது குறித்து நாம் உடனடியாக விசாரித்து வேண்டிய உதவிகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் சொன்னார்.
எந்த அரசியல் தலையீடுமின்றி உதவித் தேவைப்படுவோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் நோக்கில் மக்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த வெள்ளைக் கொடி இயக்கமாகும்.