கோலாலம்பூர், ஜூலை 9- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.டி.) அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 பரிசோதனை காரணமாக சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
பி.கே.பி.டி. அமலாக்க பகுதிகளில் குறிப்பாக நோய்த் தாக்கம் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் 10 விழுக்காட்டு குடியிருப்பாளர்கள் மீது இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.