ஷா ஆலம், ஆக 1- தொழிற்சாலை ஊழியர்களை இலக்காக கொண்ட சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டத்தின் கீழ் சுமார் 90,000 பேர் தடுப்பூசி பெற்றனர். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த தடுப்பூசி திட்டத்தில் இதுவரை 800 தொழிற்சாலைகள் பங்கேற்றுள்ளதாக செல்கேட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி நோர் ஹிஷாம் முகமது காவுத் கூறினார். இந்த தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க 32,000 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், மேலும் 3,000 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்றார். ஜோகூர், பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா போன்ற மாநிலங்களிலிருந்தும் செல்வேக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் சொன்னார். எனினும், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் காரணத்தால் இத்திட்டம் இதர மாநிலங்களுக்கு திறந்துவிடப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கான செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் மாநில அரசு இருபது லட்சம் தடுப்பூசிகளை சிலாங்கூர் அரசு ஒதுக்கியுள்ளது.