கிள்ளான் அக் 22- ஊழியர் தங்குமிட கட்டிடத்திற்கு தகுதிச் சான்றிதழ் பெற விரைந்து விண்ணப்பிக்கும்படி மேரு தொழில்பேட்டைப் பகுதியிலுள்ள தளவாடப் பொருள் விற்பனை மையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த தளவாடப் பொருள் விற்பனையாளர் ஏற்கனவே இதற்கான விண்ணப்பத்தை செய்திருந்தபோதிலும் நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாததால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கிள்ளான் நகராண்ணைக் கழகத்தின் துணைத் தலைவர் எலியா மரினி டார்மின் கூறினார். முதலாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய நிபந்தனைகளான கட்டில், மின்சாரம், நீர், கழிப்பறை, சமையலறை போன்ற வசதிகள் முறையாக ஏற்படுத்தித் தரப்படவில்லை என்று அவர் சொன்னார். நேற்று அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அந்த விற்பனை மையத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. காரணம் அவருக்கு உண்மையிலேயே தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றார் அவர். தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கு அந்த உரிமையாளருக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.