கோலாலம்பூர், அக் 22- சிலாங்கூரில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வரும் வேளையில் மலாக்காவில் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மலாக்காவில் இன்று காலை 8.00 மணி வரை 283 குடும்பங்களைச் சேர்ந்த 1,105 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 4.00 மணியளவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேர் இம்மையங்களில் தங்கியிருந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையங்களின் எண்ணிக்கை தொடர்ந்து 12 ஆக இருந்து வருவதாக மலேசிய பொது தற்காப்பு படையின் மலாக்கா மாநில இயக்குநர் லெப்டிணன்ட் கர்னல் கியுட்பெர்ட் ஜோன் மார்ட்டின் குட்ரா கூறினார்.
இதனிடையே, சிலாங்கூரில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீரடைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஹாம் காமிஸ் கூறினார்.
தற்போது சிப்பாங்கில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 279 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருப்பதை தரவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.
நிலைமை முற்றிலுமாக சீரடைந்தப் பின்னர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருப்போர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.