ஈப்போ, அக் 25- இங்குள்ள ஏவ் மரியா கான்வெண்ட் இடைநிலைப் பள்ளி வேதியல் துறை ஆசிரியையான திருமதி. வி. கோமதி 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முக மற்றும் யுடியூப் வலையொலி வாயிலாக நடைபெற்ற ஏ.கே.எஸ். கல்வி விருதளிப்பு நிகழ்வில் 38 வயதான கோமதிக்கு இந்த உலகலாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கப்படுவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தமக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டதாக மூன்று குழந்தைகளுக்கு தாயாரான அவர் சொன்னார்.
மலேசியாவிலிருந்து 321 போட்டியாளர்களும் உலகம் முழுவதுமிருந்து 26,000 போட்டியாளர்களும் பங்கேற்ற இந்த போட்டியில் தாம் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை இன்னும் நம்ப முடியவில்லை என்று கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் திருமதி கோமதி குறிப்பிட்டார்.
சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் (உப்சி) வேதியல் பாடத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், தற்போது அதே பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
மாணவர்கள் மத்தியில் வேதியல் பாடம் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதற்காக கோமதி உருவாக்கிய பல புத்தாக்கப் படைப்புகள் அனைத்துலக நிலையில் அவர் புகழ் பெறவதற்கு காரணமாக விளங்கின.