ஷா ஆலம், அக் 30- கடல் பெருக்கு மற்றும் வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்டும் வடகிழக்கு பருவ மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சுற்றுலா நோக்கங்களுக்கு கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கோல லங்காட் நகராண்மைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் 3 முதல் 7 ஆம் தேதி வரை கடல் பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் பின் அப்துல் ரஹிம் கூறினார்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக தனது ஊழியர்களை நகராண்மைக் கழகம் பணியில் அமர்த்தும் என்று அவர் சொன்னார்.
கடல் பெருக்கு காரணமாக பந்தாய் கெலானாங், பந்தாய் பாரு மோரிப், தாமான் ஹர்மோனி மோரிப், இஸ்தானா பஹாகியா, பந்தாய் பத்து லாவுட், பந்தாய் சுனாங், தஞ்சோங் சிப்பாட் படகுத் துறை ஆகிய இடங்களில் நீர் கரையைக் கடக்கும் என எதிர் பார்க்கப்படுவதாக அவ தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு கடலோர சுற்றுலா மையங்களையும் உணவு விற்பனை நிலையங்களையும் தாங்கள் மூடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரே சமயத்தில் அடை மழையும் பலத்த காற்றும் ஏற்படும் பட்சத்தில் கடல் பெருக்கு தீவிரமடைந்து மோசமான வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் சொன்னார்.