ஷா ஆலம், நவ 9- தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வைத்திருக்கும் வணிகர்கள் நிரந்தர உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கும்படி ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.) கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்காலிக வர்த்தக லைசென்ஸ் காலாவதியாகும் நிலையில் சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு வர்த்தக இடங்களை அடையாளம் காண்பதற்கு இந்த புதிய விண்ணப்பம் அவசியமாவதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் ஜமானி அகமது மன்சோர் கூறினார்.
முன்பு, வேலையில்லாத காரணத்தால் அதிகமானோர் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். தற்போது நிலைமை மாற்றம் கண்டுள்ளதோடு பெரும்பாலோர் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர் என்று அவர் சொன்னார்.
ஆகவே, உரிமம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ள வணிகர்களுக்கு நாங்கள் அடையாளம் கண்டுள்ள இடத்தில் வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவிருக்கிறோம் என்றார் அவர்.
இன்று இங்குள்ள ஆடிட்டோரியம் அரங்கில் ரொக்கமில்லா எம்.பி.எஸ்.ஏ. திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வணிகர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக லைசென்ஸ் வரும் டிசம்பர் மாதம் காலாவதியாகும் நிலையில் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து வினாவப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டில் சுமார் 7,000 சிறு வணிகர்களுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ்களை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் கூறியிருந்தார்.