ஷா ஆலம், டிச 6- மதிப்பு சரிவு காரணமாக சிலாங்கூர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கு (பி.கே.என்.எஸ்.) ஏற்பட்ட இழப்பு தற்காலிகமானதே என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பின்னடவை தற்காலிகமானது என வர்ணித்த அவர், எம்.டி.ஏ. எனப்படும் சொத்துகளின் நிலையான நிகர மதிப்பு உயர்வு காணும் போது அந்த அரசு நிறுவனம் லாபத்தை பதிவு செய்யும் என்று சொன்னார்.
சொத்துடைமை துறையில் காணப்பட்ட மந்த நிலை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக டாத்தும் கார்ப்ரேஷன் இண்டர்நேஷனல் சென். பெர்ஹாட் மற்றும் டி பல்மா மேஜேன்மேண்ட் ஆகிய நிறுவனங்களின் மதிப்பு வீழ்ச்சி கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பி.கே.என்.எஸ். செய்துள்ள முதலீடுகளைக் காட்டிலும் துணை நிறுவனங்கள் வசமுள்ள சொத்துகளின் நிலையான நிகர மதிப்பு குறைவாக இருந்த காரணத்தால் தேசிய கணக்காய்வுத் துறையின் ஆலோசனையை ஏற்று மதிப்பு சரிவு பதிவு செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
ஒரு முதலீட்டின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் நோக்கில் இந்த மதிப்பு சரிவு செய்யப்பட்டது என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இழப்பின் மதிப்பை குறைப்பதற்காக பி.கே.என்.எஸ். வெளிமாநிலங்களுக்கு முதலீட்டுப் பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைளை பி.கே.என்.எஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
பி.கே.என்.எஸ். வெறுமனே அமைதி காக்கவில்லை. அது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிளந்தான் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு நாம் பயணம் மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.