ஷா ஆலம், டிச 8- இம்மாதம் 3 ஆம் தேதி வரையிலான காலத்தில் சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் கம்யூனிட்டி திட்டத்தின் கீழ் 321,928 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 156,464 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
இதே காலக்கட்டத்தில் செல்வேக்ஸ் ரெமாஜா திட்டத்தின் வழி 1,786 இளையோருக்கு 3,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதே சமயம், செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் எனப்படும் தொழிற்சாலை ஊழியர்களுக்கான தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக கடந்த செப்டம்பர் முதல் தேதி வரை 537,045 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
இன, சமய மற்றும் அரசியல் பேதமின்றி மாநிலத்திலுள்ள அனைத்து மக்களும் நோய்த் தடுப்பாற்றலை விரைந்து பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த செல்வேக்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் இலவசமாக தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து புக்கிட் காசிங் உறுப்பினர் ஆர்,ராஜீவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
மாநில மக்களுக்கான தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில் மாநில அரசு கடந்த ஜூன் மாதம் பொது மக்கள் மற்றும் தொழில்துறையினருக்காக இரு தடுப்பூசித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியது.