சுபாங், டிச 29- வெள்ள நிவாரண மேலாண்மை மற்றும் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கு 500,000 வெள்ளி உடனடி ஒதுக்கீட்டை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அங்கீகரித்துள்ளது.
இங்குள்ள 24 தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியிப்போருக்கு அத்தியாவசியப் பொருள்களைத் தயார் செய்வது மற்றும் தன்னார்வலர்களுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட நோக்கங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சுபாங் ஜெயா டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
இது தவிர, தற்காலிக துயர் துடைப்பு மையமாக செயல்பட்ட பள்ளிகளுக்கு 8,000 வெள்ளி, பள்ளிவாசல்களுக்கு 10,000 வெள்ளி மற்றும் சூராவ்களுக்கு 5,000 வெள்ளியும் பழுதுபார்ப்பு பணிகளுக்காக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை மற்றும் அசம்பாவிதம் ஏற்படும் போது பயன்படுத்துவதற்கு நம்மிடம் 15 லட்சத்து 90 வெள்ளி நிதி ஒதுக்கீடு உள்ளது. இது தவிர எம்.பி.எஸ்.ஜே அறங்காப்பு நிதியிலிருந்து 69,000 வெள்ளி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநகர் மன்ற ஊழியர்களுக்கு செலவிடப்பட்டது என்றார் அவர்.
இன்று இயங்கலை மற்றும் உறுப்பினர்களின் நேரடி பங்கேற்பின் வழி நடைபெற்ற மாநகர் மன்றத்தின முழு அளவிலான கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளத்தால் குவிந்த குப்பைகளை அகற்ற இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கப்பட்டதற்கு உண்டான செலவும் இதில் அடங்கும் இது தவிர, சாலைகளை பழுதுபார்ப்பது போன்ற அடிப்படை வசதிகள் பணிக்கு 150,000 வெள்ளியும் வடிகால்களை மேம்படுத்த 120,000 வெள்ளியும் செலவிடப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.