ஷா ஆலம், ஜனவரி 11- சிலாங்கூர் சுல்தான் ஷராபு டீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 74வது பிறந்தநாளையொட்டி நேற்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 209 பேருக்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிலாங்கூர் சுல்தானைப் பிரதிநிதித்து தெங்கு லக்ஸ்மனா சிலாங்கூர், தெங்கு சுலைமான் ஷா பதக்கங்களையும் விருதுகளையும் வழங்குகினார். இந்த விருதளிப்பு நிகழ்வு நேற்று தொடங்கி இன்று வரை இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மொத்தம் 32 பேருக்கு பிங்காட் பெகெர்த்தி தெர்பிலே விருது (பி.பி.டி.) வழங்கப்பட்டது. மேலும் 41 பேர் பிங்காட் பெர்ஹிட்மாத்தான் செமர்லாங் சிலாங்கூர் (பி.பி.சி.) விருதினைப் பெற்றனர். இதற்கிடையில், பிங்காட் ஜாசா கெபக்தியான் (பி.ஜே.கே.) விருதை 97 பேரும் பிங்காட் பெர்ஹிட்மாத்தான் சிலாங்கூர் (பி.பி.எஸ்.) விருதை 39 பேரும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 2019 ஆம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானின் பிறந்தநாளில் விருது வழங்குவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்களாவர். அந்த ஆண்டு விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து அந்த விருதளிப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதர மாவட்டங்களைச்சேர்ந்தவர்களுக்கு இன்றைய நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும்.