கோலாலம்பூர், ஜன 13- நாட்டில் நேற்று 3,198 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,175 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 95 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார். நேற்று 3,200 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 23 ஆயிரத்து 599 ஆக உயர்வு கண்டுள்ளது. நேற்றைய தொற்றுகளில் 39 அல்லது 1.2 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சிய 3,159 தொற்றுகள் (98.8 விழுக்காடு) ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக நோர் ஹிஷாம் கூறினார். தீவிர சிகிச்சைப் பிரிவில் 215 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 105 சுவாச உதவி தேவைப்படுகிறது என்று அவர் கோவிட்-19 தொடர்பில் நிலவரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நேற்று மொத்தம் எட்டு புதிய திரள்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து தீவிரமாக உள்ள திரள்களின் எண்ணிக்கை 179 ஆக உயர்ந்துள்ளது.