ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் சுமார் 60,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
கோலாலம்பூர் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 17 செல்கேர் கிளினிக்குகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்று வருவதாக செல்கேட் ஹெல்த்கேர் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் நிதி அதிகாரி முகமது அஸ்பிசாம் ஹம்சா கூறினார்.
இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருவதாக கூறிய அவர், இம்மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு முழுமையடைந்துள்ள நிலையில் அடுத்த மாத ஒதுக்கீடு ஏறக்குறைய முழுமையடையும் நிலையில் உள்ளது என்றார்.
பெரும்பாலான மக்கள் சினோவேக் தடுப்பூசியை விரும்புகின்றனர். பொதுமக்கள் தடுப்பூசியைப் பெறுவதை எளிதாக்கும் வகையில் பல சட்டமன்றத் தொகுதிகளும் இந்த ஊக்கத் தடுப்பூசி இயக்கத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன என்றார் அவர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்திற்காக 157,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநிலத்திலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.
மாநிலத்திலுள்ள செல்கேர் கிளினிக்குகளின் பட்டியலை https://selcareclinic.com/our-clinics/ என்ற அகப்பக்கம் வாயிலாகவும் செலங்கா செயலி வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.