ஷா ஆலம், ஜன 21- வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில நிலையிலான சீனப்புத்தாண்டு நேரடி ஒளிபரப்பின் போது புத்தாண்டு வாழ்த்தை வசீகரிக்கும் வகையில் படைப்போருக்கு 10,000 வெள்ளி அங்பாவ் வழங்கப்படும்.
அனைத்து இன மக்களும் பங்கேற்பதற்கு ஏதுவாக இந்த வாழ்த்தை பல மொழிகளிலும் எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதாக பௌத்த மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ தெங் சாங் கிம் கூறினார்.
அந்த நேரடி நிகழ்வின் போது போட்டியாளர்கள் படைப்புகளை அனுப்பும் நேரத்தை நிகழ்ச்சி அறிவிப்பாளர் தெரிவிப்பார். இந்த போட்டிக்கு மொத்தம் 10,000 வெள்ளி பரிசாகத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் மாண்டரின் பேஸ்புக் மற்றும் எனது எனது பேஸ்புக் வாயிலாக அன்றைய தினம் இரவு 9.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றார் அவர்.
இந்த நிகழ்வில் கடந்த 70ஆம் ஆண்டுகள் தொடங்கி தற்போது வரையிலான மூன்று தலைமுறை கலைஞர்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெறும் என்றும் டத்தோ தெங் சொன்னார்.