ஷா ஆலம், மார்ச் 18– கல்வி, வரலாறு, கலை, கலாசாரம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய உள்நாட்டு படைப்புகளின் மேம்பாட்டு மற்றும் விரிவாக்கத் திட்டங்களைச் சிலாங்கூர் மாநில அரசு தொடரும்.
திறன்மிக்க படைப்பாளிகளைக் குறிப்பாக இளம் தலைமுறையினரை அதிகளவில் உருவாக்கும் நோக்கிலான இத்திட்டம் சிலாங்கூர் மாநிலப் பொது நூலகக் கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உள்ளூர் இலக்கியவாதிகள் மற்றும் படைப்பாளிகளுக்கிடையே அணுக்கமான தொடர்பை ஏற்படுத்துவதையும் அத்தரப்பினருடன் நட்புறவைப் பேணும் மாநிலமாகச் சிலாங்கூரை உருவாக்குவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மாநிலச் சட்டமன்றத்தில் இன்று உலு கிள்ளான் உறுப்பினர் சஹாரி சுங்கிப் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு பதிலளித்தார்.
ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் அமல் செய்யப்பட்டதைப் போல் மக்கள் படைப்பு உருவாக்கத் திட்டத்தை இங்கு அமல்படுத்துவதற்கான முயற்சியில் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் ஈடுபட்டு வருவதாகவும் அமிருடின் தெரிவித்தார்.