ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ரமலான் சந்தை-  சிலாங்கூரில் வணிகர்களுக்கு 12,000 வர்த்தக லோட்கள் ஒதுக்கீடு

ஷா ஆலம், மார்ச் 25– சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்டுள்ள 238 ரமலான் சந்தைகளில் 11,967 வர்த்தக லோட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ரமலான் சந்தைக்கு மாநிலம் முழுவதும் உள்ள 12 ஊராட்சி மன்றங்கள் 10,783 விண்ணப்பங்களைப் பெற்ற வேளையில் அவற்றில் 9,720 அங்கீகரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

செலாயங் நகராண்மை கழக பகுதியில் மிக அதிகமாக அதாவது 2,219 கடைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட வேளையில் அதற்கு அடுத்த நிலையில் காஜாங் நகராண்மை கழகம் (1,790) மற்றும் கோல லங்காட் நகராண்மைக் கழகம் (1,031) உள்ளன என்றார்.

இந்த வர்த்தக வாய்ப்புகள் வழங்கும் விஷயத்தில் இவ்வாண்டு தொடக்கத்தில் பரவிய கோவிட்-19 ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றின் தாக்கம் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக இடங்கள் கிடைக்காதவர்கள் அதிகமான லோட்களை ஒதுக்கீடு செய்துள்ள ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம், உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் ஆகிய ஊராட்சி மன்றங்களில் விண்ணப்பம் செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு மற்றும் தேசிய  பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :