ANTARABANGSAECONOMY

இலங்கையில் அவசரகால நிலை நீக்கம் – அதிபர் அறிவிப்பு

அங்காரா, ஏப்ரல் 6 – இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகால நிலையை  அதிபர்  திரும்பப் பெற்றதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம்  நேற்று தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ சிறப்பு செய்தி குறிப்பு  கூறியதாக அனடோலு செய்தி  நிறுவனம் கூறியது.

கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடி அதிபர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்த ஒரு தினத்திற்கு பிறகு அதிபர் கோட்டபாய ராஜபக்சே அவசரநிலையை அறிவித்தார்.

கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியதோடு ஏராளமான போராட்டக்காரர்களை கைது செய்ததாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ராஜபக்ச நிர்வாகத்தின் முறையற்ற நடவடிக்கைகளால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து அத்தியாவசிய இறக்குமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மேலும்  உணவுப் பொருள் விலை உயர்வு கண்டதோடு சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக 13 மணி நேரத்திற்கும் மேல்  நீடித்த மின்தடை, எரிபொருள், உணவு மற்றும் மருந்து விநியோகம் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளில்  இலங்கை அரசு சிக்கித் தவித்து வருகிறது.

அடுத்த 12 மாதங்களில் 730 கோடி அமெரிக்க டாலர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில் இலங்கை திவாலாகலாம். கடந்த பிப்ரவரி வரை அந்நாட்டிடம்  231 கோடி அமெரிக்க டாலர்  மட்டுமே கையிருப்பில் உள்ளது.


Pengarang :