ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சவ அடக்கச் சேவையில் ஊழல்- 4 மருத்துவமனைப் பணியாளர்கள் கைது 

ஷா ஆலம், மே 31– சவ நல்லடக்கச் சேவையை மேற்கொள்ளும் வாய்ப்பினை சில தரப்பினருக்கு வழங்குவதற்காக வெ.1,000 முதல் வெ.5,000 வரை கையூட்டுப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு மருத்துவமனை ஊழியர்களை சிலாங்கூர் மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.

கைதானவர்களில் இருவர் உதவி சுகாதார அதிகாரிகள் என்றும் மேலும் இருவர் உதவி மருத்துவ அதிகாரிகள் என்றும் எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.

முப்பத்தைந்து முதல் 41 வயது வரையிலான அந்த நால்வரும் வாக்குமூலம் அளிப்பதற்காக இங்குள்ள சிலாங்கூர் எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு நேற்று மாலை வந்த போது கைது செய்யப்பட்டதாக அவ்வட்டாரம் மேலும் தெரிவித்தது.

கடந்த 2018 முதல் கடந்தாண்டு வரையிலான காலக்கட்டத்தில் குறிப்பிட்ட சில நபர்களுக்கு சவ அடக்கச் சேவையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக அவர்களிடமிருந்து அந்த பணியாளர்கள் கையூட்டு பெற்றதாக நம்பப்படுகிறது.

இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீம், 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதே குற்றச்சாட்டு தொடர்பில் 40 மற்றும் 42 வயதுடைய இரு மருத்துவமனை ஊழியர்களை விசாரணைக்காக ஐந்து நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை எம்.ஏ.சி.சி. கடந்த 27 ஆம் தேதி பெற்றது.


Pengarang :