புத்ராஜெயா, ஆகஸ்ட் 15- எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென்.பெர்ஹாட் நிதியில் 4 கோடியே 29 லட்சம் வெள்ளியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
அந்த பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது நஸ்லான் முகமட் கசாலி கடந்த 2020 ஜூலை 8ஆம் தேதி விதித்த 12 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 21 கோடி வெள்ளி அபராதத்தை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி மறுவுறுதிப்படுத்தியது.
எஸ்.ஆர்.சி. வழக்கில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க நஜிப் செய்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் முதலில் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.